ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்திய அணி சால்பில் அதிகபட்சமாக ரஹாணே-19, விராட் கோலி-44, ரோஹித் சர்மா-34 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுக்களையும், போல்ட் மற்றும் வோக்னெர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
இதையடுத்து முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 2விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாது கைவிடப்பட்டிருந்தது.
ஐந்தாவது நாளாகிய நேற்றும் மழை குறுக்கிட்டதால் ஒரு மணிநேரம் தாமதமாக போட்டி தொடங்கிய நிலையில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 249 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டையும் இழந்தது.
அதிகபட்சமாக டெவோன் ஹென்றி-54, வில்லியம்சன்-49 ஓட்டங்களையும், ரொம் லதம் மற்றும் ரிம் சௌதே தலா 30 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் முகமட் சமி - 4, இசாந்த் சர்மா - 3, அஸ்வின் - 2 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
32 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர்.
சுப்மான் கில் 8 ஓட்டத்துடனும், ரோகித் சர்மா 30 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
புஜாரா 12 ஓட்டத்துடனும், கோலி 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நியூசிலாந்து சார்பில் சௌதே 2 விக்கெட் வீழ்த்தினார்.
போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து